‘பரியேறும் பெருமாள்’ நடிகர் காலமானார்!

2018ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் புதிய புதிய முயற்சிகள் அறிமுகமாயின. அப்படி வெளியான புதிய முயற்சியாக அமைந்ததுதான் பரியேறும் பெருமாள் திரைப்படம். சாதிய வன்கொடுமைக்கு எதிராகவும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் இந்தத் திரைப்படம் பேசியது வரவேற்பினைப் பெற்றது. இந்தத் திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, மாரிமுத்து போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இசை சந்தோஷ் நாராயணன் செய்திருந்தார்.

தற்போது இந்தத் திரைப்படத்தில் கதிரின் தந்தையாக நடித்திருந்த தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் இயற்கை எய்தியுள்ளார். இத்திரைப்படத்தில் பரியனின் சக வகுப்பு மாணவர்கள் இவரது வேட்டியை கழட்டி ரோட்டில் துரத்தும் காட்சி அனைவரையும் உலுக்கியது. அந்தக் காட்சி இன்றைக்கும் பலரின் நெஞ்சுள் உரமாக பதிந்துள்ளது. இந்தக் காட்சியில் நடித்ததற்காகவே நடிகர் மாரிமுத்து விழா ஒன்றில் நெல்லை தங்கராஜின் காலில் விழுந்து அவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி கண்கலங்கினார். அப்படிப்பட்ட நடிகர் இன்று இறந்துள்ளது அப்படக்குழுவினருக்கும் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தவர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

Exit mobile version