விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு : இந்த ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு

விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விண்ணப்பித்த 4 மணி நேரத்தில், பான்கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவக்கப்பட உள்ளதாகவும், தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக, வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், வருமான வரி கணக்கு தாக்கலின் போது, அது தொடர்பான விவரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 5 லட்சத்துக்கும் கீழ் வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

Exit mobile version