தாம்பரம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தின் ரகசிய அறையில் முதியவர் சடலம் மீட்பு

தாம்பரம் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ரகசிய அறையில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அடுத்த பொழிச்சலூரில் உள்ள செயின்ட் அல்போன்சியா சைரோ மலபார் கேத்தலிக் சர்ச்சில் ரகசிய அறைகள் இருப்பதாகவும் அதில் சடலங்கள் இருப்பதாகவும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பல்லாவரம் வட்டாட்சியர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு வந்தனர்.

ஆலயத்தின் உள்ளே 12 அறைகள் சிமெண்ட் பூசி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 12 அறைகளையும் உடைத்து பார்த்தனர். இதில் ஒரு அறையில் மட்டும் ஆண் சடலம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேவாலயத்தில் அனுமதி பெறாமல் கல்லறை இருந்ததாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கல்லறைக்கு என்று இதுவரை அனுமதி பெறாதது உண்மைதான் என்றும் கல்லறைக்கு அனுமதி கேட்டுள்ளோம் என முன்னாள் தலைவர் மேத்திவ் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version