போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் – அமைச்சர் செங்கோட்டையன்

அரசாணை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளி தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஈரோட்டில் விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், 462 மாற்றுத்திறனாளிகளுக்கு 77 லட்சத்து 63 ஆயிரத்து 380 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசாணை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழுவின் அறிக்கை, ஒரு சில வாரங்களில் அரசிடம் சமர்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version