கம்பளா போட்டியில் சீனிவாஸ் கவுடா சாதனையை முறியடித்த நிஷாந்த் ஷெட்டி

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பளா போட்டியில் அதிவேகமாக ஓடிய சீனிவாஸ் கவுடாவின் சாதனையை நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் மங்களூரு மாவட்டத்தில் நடைபெற்ற கம்பளா போட்டியின் போது அவ்சதாபுராவை சேர்ந்த சீனிவாஸ் கவுடா என்பவர் 142.50 மீட்டர் தொலைவை 13.62 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.  இதன்படி, உலக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டின் 100 மீட்டர் ஓட்டப்பந்தய சாதனையை 9.55 விநாடிகளில் கடந்து முறியடித்தார். இதனால் அவரை கர்நாடகாவின் உசேன் போல்ட் என அம்மாநில மக்கள் வர்ணித்து புகழாரம் சூட்டினர். மத்திய, மாநில அரசுகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சீனிவாஸ் கவுடாவுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுமென மத்திய விளையாட்டு துறை அறிவித்தது. இந்நிலையில், உடுப்பி மாவட்டம் வேணூர் பகுதியில் நடைபெற்ற கம்பளா போட்டியில் பங்கேற்ற நிஷாந்த் ஷெட்டி என்ற இளைஞர், சீனிவாஸ் கவுடாவின் சாதனையை முடியடித்துள்ளார். 143 மீட்டர் தொலைவை நிஷாந்த் ஷெட்டி, 13.61 விநாடிகளில் கடந்தார். எனினும் சீனிவாஸ் கவுடா ஏராளமான பதக்கங்கள் வென்றவர் என்றும், அவரை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் நிஷாந்த் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

Exit mobile version