இலங்கைக்கு திங்களன்று புதிய பிரதமர் நியமனம் – அதிபர் சிறிசேன அறிவிப்பால் பரபரப்பு

இலங்கையின் புதிய பிரதமரை திங்கட்கிழமை நியமிக்க போவதாக அந்நாட்டின் அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். இலங்கையில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டார்.

அதற்கு பதிலாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்சவை புதிய பிரதமராக நியமித்து அதிபர் சிறிசேன நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

மூன்று முறை முயற்சித்தும் நாடாளுமன்றத்தில் ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்தது செல்லாது என அறிவிக்க கோரி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து சிறிசேன கட்சியை சேர்ந்த 7 எம்.பி.கள் ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தான் இலங்கையின் புதிய பிரதமரை திங்களன்று அறிவிக்கப்போவதாக சிறிசேன அறிவித்துள்ளார். முன்னதாக ரணிலை மீண்டும் பிரதமராக அறிவிக்க மாட்டேன் என சிறிசேன கூறியிருந்தார்.

 

 

 

Exit mobile version