நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!

உண்மையான காதல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய காலகட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யார் அவர்?

நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசிக்கும் கண்ணனின் வீட்டில் இருந்து அழுகை சப்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது கண்ணனின் மகன் 32வயது மாரிராஜ், மயங்கிய நிலையில் கிடைந்துள்ளார். விஷத்தை குடித்துவிட்டதாக குடும்பத்தினர் கதற, உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குடும்பத்தினரின் முயற்சி வீணாகியபோல, மாரிராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் மருத்துவமனை வந்தவர்கள் மாரிராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குடும்பத்தினரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒருதலைக் காதல் விபரீதத்தில் மாரிராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

ஏ.சி.மெக்கானிக்கான மாரிராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாக நேசித்து வந்துள்ளார். நேசம் காதலாகி, தனது காதலை எடுத்துச் சொன்னபோது, அந்தப் பெண் அதனை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால் ஒருதலையாக காதலித்து வந்த மாரிராஜ், தனக்கு அந்தப் பெண் கிடைக்கமாட்டார் என்னும் மனவருத்தத்தில் இருந்ததாகவும், அதனால் வீட்டில் வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஒரு தலைக் காதல் மட்டுமா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் மாரிராஜின் உயிரைப் பறித்ததா என்று விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version