போலி நகைகளை ரூ.8.5 லட்சத்திற்கு அடகு வைத்த மர்ம நபர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் மூலம் நூதன முறையில் மோசடி செய்து கடன்பெற்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டி ஆரியமாலா திருமயம் பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளராக உள்ளார். ஆரியமாலாவை அணுகிய சில மர்ம நபர்கள், தங்களிடம் உள்ள நகைகளை வங்கியில் அடகுவைத்து தருமாறு கோரியுள்ளனர். இதையடுத்து 330 கிராம் எடையுள்ள நகைகளை 8.5 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து கொடுத்துள்ளார்.

அடகு வைத்த போது நகை மதிப்பீட்டாளர் நண்பகல் வரை விடுப்பில் இருந்ததால், காசாளர் நகைகளை வாங்கிவிட்டு பணத்தை கொடுத்துள்ளார். பிற்பகல் பணிக்கு திரும்பிய நகை மதிப்பீட்டாளர், சந்தேகத்தின் பேரில் நகையை சோதனை செய்ததில் 330 கிராம் நகையும் போலி என்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வங்கி மேலாளர் காவல்துறையினருக்கு புகாரளித்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு காமிரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version