புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, புதுச்சேரி பாஜக அலுலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், இந்திராகாந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version