காக்கா முட்டை பட பாணியில் ரயில் பயணியிடம் செல்போனை பறித்த சிறுவர்கள்

சென்னை திருவொற்றியூர் அருகே பயணி ஒருவரிடம் காக்கா முட்டை திரைப்பட பாணியில் செல்போனை பறித்த சம்பவத்தின்போது பயணியின் மேல் ரயில் ஏறியதில் அவரது கால் துண்டானது.

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அண்ணாமலை நகர் கேட் பகுதியில் சிக்னலுக்காக மெதுவாக சென்று கொண்டிருந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமசிவா ரயில் படி அருகே நின்று செல்போனில் பேசிய படியே பயணம் செய்ததாகத் தெரிகிறது.

அப்போது தண்டவாளத்தின் அருகே கையில் கம்புடன் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் ராமசிவாவைத் தாக்கி செல்போனை பறித்தனர். இதனால் நிலைகுலைந்து ரயிலில் இருந்து கீழே விழுந்த ராமசிவா மீது ரயில் ஏறியதில் அவரது கால் துண்டானது. இதுகுறித்து தகவலறிந்த கொருக்குபேட்டை ரயில்வே காவல்துறையினர் ராமசிவாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் செல்போனை பறித்துச் சென்ற சிறுவர்களைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version