அண்ணா பல்கலைகழகத்திற்கு கடந்த 2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்தநிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம், பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேரிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை, லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உமா உட்பட பேராசிரியர்கள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கோட்டூர்புரத்தில் பேராசிரியை உமாவின் வீடு, திண்டிவனத்தில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமார் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ததில் உள்ள குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.