விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு உதவி செய்த அமைச்சர் தங்கமணி,

சாலை விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர் தங்கமணி, அவரை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் இருந்து ஓடப்பள்ளி செல்லும் சாலையில், பூபாலன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியதில் பூபாலன் படுகாயமடைந்தார்.

இதனிடையே அந்த வழியாக வந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, படுகாயமடைந்த பூபாலனுக்கு முதலுதவி செய்து, பத்திரமாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூபாலன், பள்ளிப்பாளையம் வேளாண்மை அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

விபத்தில் சிக்கியவருக்கு உடனடியாக உதவி செய்த அமைச்சர் தங்கமணியை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பூபாலனுக்கு உரிய சிகிச்சை அளிக்க,அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.

Exit mobile version