மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்தக் கலந்தாய்வில், 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 146 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தமிழக அரசு ஏற்று நடத்தும் ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 263 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதேபோன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாகவுள்ள 16 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 2 ஆயிரத்து 300 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version