மதுரையில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்து: மேலும் 2 பேர் பலி

மதுரையில் ஏற்பட்ட கட்டட விபத்தில் மேலும் இருவர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் மாதவன் என்பவர் புதிதாக மூன்று மாடி கட்டடம் கட்டி வந்துள்ளார். கட்டடம் கட்டுவதற்கு அவர் உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கட்டடம் கட்டப்படும் இடத்தில் முன்னர் கிணறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளியன்று கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட காசிநாதன், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜசேகரன் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பழனிகுமார், பாலமுருகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Exit mobile version