தனியார் உணவக உரிமையாளருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் உணவக உரிமையாளரை சரமாரியாக கத்தியால் தாக்கியவர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டை சிக்கண்ணா தெருவில் பழனிநாதன் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் எதிரெதிரே உணவகங்களை நடத்தி வருகின்றனர். தொழில்போட்டி காரணமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனிநாதனை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பழனிநாதன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தொழிற்போட்டி காரணமாக கடை உரிமையாளர் செந்திலே தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து செந்தில் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கடை மேலாளரைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Exit mobile version