ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாளை நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டம், 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் அறிக்கையை ஆய்வு செய்ய, தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்ற கிளையில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர், வரும் 10 ம் தேதிக்கு தங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இதனிடையே, 10 ம் தேதி, தமிழக அரசு சார்பில், ஒரு நபர் கமிட்டியின் அறிக்கை ஆய்வு குறித்த தகவல்களை அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version