நாளை தொடங்குகிறது இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட்!

இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதனையொட்டி முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. நாக்பூரில் விசிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் களம் காண்கிறார்கள். ஆல் ரவுண்டர் ஜடேஜா அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம். மேலும் சமீபத்தில் திருமணத்திற்காக விடுப்பில் இருந்த கே.எல்.ராகுலும், அக்சர் படேலும் அணிக்கு திரும்பியுள்ளனர். முதன்முறையாக சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டி விளையாடுகிறார். இதைத் தவிர இந்தியாவின் புதிய நம்பிக்கை சுப்மன் கில் இடம்பிடித்துள்ளார். மேலும் ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். சுழல் ஜாம்பவான் அஸ்வினும் உள்ளார்.

ஆஸ்திரேலியா அணியினைப் பொறுத்தவரை கேப்டன் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், லபுசேன், உஸ்மான் கவஜா போன்றோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் வலுவான ஃபார்மில் உள்ள ட்ராவிஸ் ஹெட்டும் முக்கியமாக இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக ஆஸியின் வேகக்குதிரை ஸ்டார்க் முதல் போட்டியில் மட்டும் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கான ஒரு சவால்தான்.

Exit mobile version