திருநெல்வேலியில் மூன்றடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

திருநெல்வேலியில் 78 கோடியே 51 லட்ச ரூபாய் மதிப்பில், மூன்றடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நெல்லை பேருந்து நிலையத்தை 3 அடுக்கு பேருந்து நிலையமாக மாற்ற முதலமைச்சர் பழனிசாமி ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து சீர்மிகு திட்டத்தின் கீழ் சுமார் 78 கோடியே 51 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

3 லட்சத்து 31 ஆயிரத்து 407 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள நவீன பேருந்து நிலையத்தில், தரை கீழ்தளம், தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளத்துடன் 144 கடைகள் இயங்க உள்ளன. ஆயிரத்து 629 இருசக்கர வாகனங்களும், 106 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் பிரமாண்டமாக அமைய உள்ளது. 4 மின் தூக்கிகளும், 2 நகரும் படிக்கட்டுகளும், பயணிகள் காத்திருப்புக்கு குளிரூட்டப்பட்ட அறை, கண்காணிப்புக்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் மூன்றடுக்கு பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதனை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஸ், சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Exit mobile version