கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை சிபிஐ கொண்டு விசாரிக்க கோரிக்கை

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களின் மோசடியை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசிடம், பாதிக்கப்பட்ட பைரோஸ் பானு கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்த பைரோஸ் பானு, துபாயில் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

தனது மாற்றுத்திறனாளி மகனின் எதிர் காலத்திற்காக வைத்திருந்த சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை, ஹெலிகாப்டர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், முதலீடு செய்த பணம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் வராத நிலையில், பணம் குறித்து ஹெலிகாப்டர் சகோதரர்களின் நிறுவனர்கள் கணேஷ் மற்றும் சாமிநாதனிடம் கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பைரோஸ் பானு, சுமார் 600 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மோசடி குறித்து தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Exit mobile version