கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது: ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவத்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஹர்ஷ்வர்தன் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் ஜனவரி 17ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். கொரோனா வைரஸ் 78 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்திய மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில்  முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்போவதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

Exit mobile version