தமிழக அரசின் செயல்பாட்டுக்கு ஆளுநர் பாராட்டு – உணவை உட்கொண்டும் தரத்தை சோதித்து பார்த்தார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பணிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து வருவதாக தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். முகாம்களில் உள்ள உணவுக் கூடத்தை பார்வையிட்ட அவர், உணவை உட்கொண்டு அதன் தரத்தையும் சோதித்து பார்த்தார்.

அப்போது சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் அனைத்தும் சிறந்த முறையில் நடைபெற்று வருவதாக கூறினார். மக்களின் அத்தியாவசிய தேவைகளை அர்ப்பணிப்புடன் பூர்த்தி செய்து வரும் அதிகாரிகளை பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் குறைகள் அனைத்தும் 2, 3 நாட்களில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version