மாணவிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு – தங்கமகன் மாரியப்பனின் தம்பி உள்பட 3 பேர் கைது

ஓமலூர் அரசுப்பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வந்த சேலம் மாரியப்பனின் தம்பி கோபி, சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வருகின்றார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான ஓமலூர் அருகே உள்ள பெரியவடம்பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளை, கோபி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவிகளிடம் செல்போன் எண் கேட்டு மிரட்டுவதாகவும், தரமறுத்ததால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற போலீசாரிடம் கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரியப்பனின் தம்பி கோபி அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் ஓமலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Exit mobile version