வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மைகள் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் கிடங்கு இயங்கி வருகிறது. நடராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த கிடங்கில் பலகோடி மதிப்புள்ள பொம்மைகள் மற்றும் சிலைகள் உருவாக்கப்பட்டு வந்தன. இந்த பொம்மைக்கிடங்கில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கிடங்கு அருகில் உள்ள மின் மாற்றி வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த பல்வேறு பொம்மைகள், சிலைகள் எரிந்து சேதமடைந்தன. இவ்விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version