செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை செங்குன்றம் அருகே தனியார் கிடங்கில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தண்டல் கழனியில் சுரேஷ் என்பவருக்கு சப்தகிரி லாஜிஸ்டிக் என்கிற பெயரிலான கிடங்கு உள்ளது. இங்கு அறைகலன்கள், பெயின்ட்கள் ஆகியன இருப்பு வைக்கப்பட்டுப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இங்கு அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனமும் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்தக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில், அட்டைப் பெட்டி தயாரிக்கும் நிறுவனம் முழுவதுமாக எரிந்தது. அங்கிருந்து அருகிலுள்ள அறைகலன்கள், பெயின்ட் கிடங்குக்கும் தீ பரவியது. தகவல் அறிந்த செங்குன்றம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.

செங்குன்றம், மாதவரம், வியாசர்பாடி, மணலி, அம்பத்தூர், செம்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிபத்தில் அங்கு சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான அறைகலன்கள், பெயின்ட்கள், அட்டைப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.

Exit mobile version