மதுரை-சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரயில்

மதுரை – சென்னை இடையிலான அதிநவீன ரயிலான தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.

குமரியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி, மதுரை – சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் ரயில்சேவையை துவக்கி வைக்கவுள்ளார். இந்த ரயில் முதல் சேவையாக மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை இரவு 9.15 மணிக்கு வந்தடையும்.

பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த அதிநவீன தேஜஸ் ரயில், சென்னை-மதுரை இடையிலான 496 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி 30 நிமிடங்களில் சென்றடையும். ஜிபிஎஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி விளக்குகள், தானியங்கி கதவுகள் வசதி, செல்லிடப்பேசி சார்ஜ் செய்யும் வசதி, கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகளை கொண்ட, தேஜஸ் ரயில், வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

வழக்கமான சேவையில், சென்னையில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலுக்கான வழக்கமான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது.

சென்னை – மதுரை மார்க்கத்தில் பயணம் செய்ய, சேர் கார் கட்டணம் 1,035 ரூபாயாகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்பு கட்டணம் 2,110 ரூபாயாகவும் இருக்கும் என்றும், மதுரை – சென்னை மார்க்கத்தில் சேர் கார் கட்டணம் 1,195 ரூபாயாகவும், எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 2,295 ரூபாயாகவும் இருக்கும் என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version