போலி என்கவுண்டர் – 7 ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு 5 பேரை ராணுவம் என்கவுண்டர் செய்தது. 1994-ஆம் ஆண்டு தேயிலை நிறுவனம் ஒன்றின் மேலாளர் கொலையான வழக்கில் 9 பேர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்ட நிலையில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 5 பேர் தப்பி ஓட முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த என்கவுண்டர் போலியானது என்றும் அவர்கள் 5 பேரும் சித்தரவதை செய்து சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

கொல்லப்படுவதற்கு முன்பாக 5 பேரும் கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.லால், கர்னல்கள் தாமஸ் மேத்யூ, ஆ.எஸ்.சிபிரென், கேப்டன்கள் திலிப் சிங், ஜெகதேவ் சிங், நாயக் ரேங்கில் உள்ள அல்பிந்தர் சிங், சிவேந்தர் சிங் ஆகிய 7 பேருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் 7 அதிகாரிகளும் குற்றவாளிகள் என ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை பணியில் இருந்து விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version