ஈரோட்டில் ரூ. 5 லட்சம் கேட்டு விவசாயியை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர் 

ஈரோட்டில் 5 லட்சம் பணம் கேட்டு விவசாயியை கடத்திய கும்பலை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல், 40 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் அவரை, நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்மகும்பல் ஒன்று, வீட்டில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சக்திவேலின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு 5 லட்சம் கேட்டு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், தனிப்படை அமைத்து, கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.

இதையடுத்து, போலீசாரின் ஆலோசனைப்படி சக்திவேலின் உறவினர்கள் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசாரை பார்த்ததும் கடத்தல் கும்பல் தப்பியோடினர்.

இதையடுத்து, அவர்களை விரட்டிசென்ற போலீசார், நாமக்கல் ரயில்வே மேம்பாலம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கடத்தப்பட்ட விவசாயி சக்திவேலு பத்திரமாக மீட்கப்பட்டார்.

 

 

Exit mobile version