கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.80 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்து, ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள, பொம்மாஜிகுளம் பகுதியில் தேர்தல் உதவி அலுவலர் பார்வதி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 80 லட்சம் ரூபாய் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.

அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேனில் வந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். பொன்னேரியில் உள்ள வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Exit mobile version