தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை விடியா திமுக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டை விடியா திமுக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பல சாதனைகளை புரிந்து வந்த ஆவின் நிறுவனம், விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அம்மா ஆட்சியின் போது, தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்றால் என்ன? என்ற நிலை மாறி, தாய்ப்பாலுக்கு நிகரான ஆவின் பால், இல்லாமல் அல்லலுறும் அவலைநிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கழக இடைக்கால பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார்.

கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல், ஆவின் நிறுவனத்தை முடக்கும் வேலையை திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்கட்சித்தலைவர், பாலின் தரத்தை குறைத்ததுடன், ஆவின் நிறுவனத்தின் இதர பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்களை பயனடைய வழிவகை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதலை விடியா அரசு குறைத்ததன் காரணமாக, தனியார் நிறுவனங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். இதனால் தான், தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையில் பால் விநியோகம் அடியோடு சீர்குலைந்து விட்டதாகவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கும் எதிலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சி செய்யும் விடியா திமுக ஆட்சியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுடன் ரகசியமாக கூட்டணி அமைத்து ஆவின் நிறுவனத்தை முடக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தை சீரழித்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் போக்கை விடியா ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால், ஆவின் பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் கண்ணீர், இந்த ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் சுட்டெரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.

எனவே, பால் கொள்முதலை உடனடியாக அதிகரித்து, பால் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் கிடைப்பதற்கு விடியா திமுக அரசு வழிவகை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில், பிஞ்சு குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் தரமான ஆவின் பாலை தட்டுப்பாடின்றி வழங்க இயலாத ஆட்சியாளர்களை எதிர்த்து, மக்கள் கொந்தாளிப்பார்கள் எனவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version