ஒரு காலத்தில் நாம் மருந்து மாத்திரைகளை வாங்குவதற்கு மருத்துவமனைக்குதான் செல்வோம். பிறகு மருத்துவமனையினையொட்டி மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு தனித்தனியாக மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. நம்மில் சிலர் மருத்தவமனைகளை அணுகாமல் மருந்தகங்களை தற்போது வரை அணுகிவருகிறோம். இப்போது இந்தத் தன்மை ஒருபடி அதிகமாக சென்று ஆன்லைனில் அதாவது இணையத்தில் தேடி வீட்டிற்கு வரசெய்து விடுகிறோம். இது பெரும்பாலான வளர்ந்த பெரு நகரங்களில் அதிகமாக காணப்படும் தன்மையாக உள்ளது. தற்போது இந்திய உடல்நல அமைச்சகமானது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய மருந்துகள் சட்டம் 1940 அல்லது மருந்தக சட்டம் 1948ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களிலிருந்து மட்டுமே ஆன்லைன் சேவையை மக்கள் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கு காரணம் சில பதிவு செய்யப்படாத மருந்தகங்கள் இணைய சேவையில் உள்ளது. மேலும் காலாவதியான மருந்துகளையும் அம்மருந்தகங்கள் விற்கக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்றுகாலத்தில்தான் இந்த ஆன்லைன் மருந்து விற்பனை அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 80 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த இணையசேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும் 2021 லிருந்து இருக்கும் இந்த இ-மருந்தகங்களின் வளர்ச்சியானது 2027 க்குள் 21.28% சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்களும் இந்த சேவையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இந்திய மருத்துவ துறையின் இந்த வலியுறுத்தல் என்னவென்றால் சிலர் தவறான மற்றும் போதை மருந்துகளைக்கூட இந்த முறையில் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு இந்த இ-மருந்தகங்களும் துணைபோகின்றன என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.