போலி ஆவணம் மூலம் அரசு நிலத்தை ஆக்கிரமித்த திமுக எம்.எல்.ஏ.?

போலி ஆவணம் மூலம் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில், கிண்டியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக ஆவணம் தயாரித்து, கையகப்படுத்தி, மா.சுப்ரமணியன் வீடு கட்டியுள்ளதாகவும், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரி இருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தஹில் ரமணி, நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மா.சுப்ரமணியத்திடம் சிறுதொழில் வளர்ச்சி கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கை 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும், மா.சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

Exit mobile version