போதை மாத்திரை கேட்டு மருந்து கடையில் தகராறு

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்கள் சிலரும் போதை மாத்திரைகளை கேட்டு தகராறு செய்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான மருந்துக் கடையில், இளைஞர்கள் சிலர் புற்று நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரையை கேட்டு தகராறு செய்தனர்.

மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரையை தர முடியாது என கடை உரிமையாளர் சரவணன் கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசி கடையை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட சரவணன், அகமதுல்லா ஆகிய இரண்டு பேரை கைது செய்திருந்த நிலையில், மேலும், அருண், முரளி, சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

குடி போதையில் தகராறு செய்தது, கடையை அடித்து நொறுக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மணிமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version