ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் பயிற்சியை தொடங்குகிறார் தோனி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வரும் 2-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு தயாராவதற்கு வசதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி வருகிற 2-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.  மார்ச் 19-ந்தேதி தொடங்கும் பயிற்சி முகாமின்போது, அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து விடுவார்கள் என்று தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய பிறகு தோனி  எந்தவித சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஓய்வு பெறுவாரா? அல்லது தொடர்ந்து விளையாடுவாரா? என்பதில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஆட்டத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்தே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.  தோனி 2 வாரங்கள் பயிற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவும், அம்பத்தி ராயுடுவும் கடந்த 3 வாரங்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version