நாளை மறுநாள் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் மசோதா நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உடனடி முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நாளை மறுநாள் 31 ம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யபடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே சட்டமாகும் என்பதால், மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அதே நேரம், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட அவையில், பாஜகவுக்கு 93 பேரும், காங்கிரஸ் கூட்டணிக்கு 112 பேரும் உள்ளனர். இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 39 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 123 பேர் தேவைப்படும் என்பதால், இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், முத்தலாக் மசோதாவை கடுமையாக எதிர்த்ததால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version