கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது: நீதிபதிகள்

கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது, இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த கருங்காட்டன்குளம்  விவசாயிகள் நல சங்க தலைவர் விஜயராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், முல்லைப் பெரியாரியாற்றின் பாசன ஆறுகளில் இருந்து சட்ட விரோதமாக குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா வைரஸ் நம் வாசற்படியில் தான் உள்ளது என்றும், இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தண்ணீர் திருட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Exit mobile version