கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை விட, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் உட்பட புதிதாக 15 ஆயிரத்து 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 62 ஆயிரத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 342 பேர் ஆண்கள் என்றும், 6 ஆயிரத்து 766 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 989 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14ஆயிரத்து 119 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 982 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 353 பேரும், சேலத்தில் 894 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 844 பேரும், செங்கல்பட்டில் 586 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

27 ஆயிரத்து 463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 374 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 244 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 130 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version