கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?

ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோரமண்டல் ரயில் விபத்தானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்த 288 பேர்களின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியுள்ளது. விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

ரயில் விபத்து எப்படி நடைபெற்றது? 

கொல்கத்தா மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிஷா மாநிலம் பாலஷோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அதே சமயத்தில் அந்த தண்டாவளத்தின் வழியாக யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

மூன்று ரயில்களா? நான்கு ரயில்களா? 

ஊடகங்கள் அனைத்தும் கோரமண்டல் கோரவிபத்தில் சிக்கியது மூன்று இரயில்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆனால் ரயில் விபத்து சம்பந்தமான புகைப்படத்தினைப் ஆராயும்போது அங்கு இன்னொரு சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் இன்ஜின்மீது விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டி ஒன்று மோதியுள்ளது. இருப்பினும் நிறுத்திவைக்கப்பட்ட சரக்கு ரயிலுக்கு பெரிய அளவில் சேதாரம் இல்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயமும் கேள்வியும் எழுகிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்ட பிறகு, நான்காவதாக ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸிற்கு, லூப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த சரக்கு ரயிலின் லோகோ பைலைட் அல்லது ரயில் நிலைய சிக்னல் கண்காணிப்பாளர் ஹவுரா எக்ஸ்பிரஸிற்கு தகவல் கொடுத்திருக்கலாம். முக்கியமாக இதில் 4 வது சரக்கு ரயிலின் லோகோ பைலட் உடைய தவறும் கவனக்குறைவும் இருக்கிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார். லோகோ பைலைட் நிலைய கண்காணிப்பாளரிடம் (station master) தகவல் சொல்லியிருக்கும் பட்சத்தில் அதிகளவிலான விபத்தினை தடுத்து நிறுத்தியிருந்திருக்க முடியும். ஆனால் லோகோ பைலட் ஏன் எந்த தகவலும் கொடுக்க முன்வரவில்லை?

தொடர்ந்து மூன்று ரயில்கள்தான் இந்த விபத்தில் சிக்கியிருக்கின்றன என்றும், நான்காவதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலைப் பற்றி வாய் திறக்காமலும் பலர் மவுனித்து வருவதன் பின்னணி என்ன?  நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை புலப்படுமா?  வரும் காலங்களிலாவது மனிதத் தவறுகள் (Human errors) சரிசெய்யப்படுமா?

Exit mobile version