ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளது. ரஃபேல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, இந்த விவகாரத்தில் பல்வேறு அடுக்குகளில் ஊழல் நடைபெற்றுள்ளதால் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என எங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரனைக்கு உத்தரவிட இயலுமா என பிரதமர் மோடிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அஞ்சவில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு விசாரணை நடத்த கூடாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாயில் இருந்து ஆயிரத்து 670 கோடியாக எப்படி உயர்ந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.