கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலில் சிக்கி டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் பால், வேட்டி, சேலை, போர்வை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

புயல் மற்றும் மழை தாக்கியதில் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு 4 ஆயிரத்து 100 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதை முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெய்து வரும் பருவமழையில் இருந்து வீடுகளை பாதுகாப்பதற்காக கூரை மேல் போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கை வந்ததாக கூறியுள்ள முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்து கொள்வதற்கு தார்ப்பாய் ஷீட்டுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக வாங்கி உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version