ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் வீரத் தியாகிகள் என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். 6 ஆயிரத்து 119 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போன்று, உள்நாட்டில் காவலர்கள் சிறப்பாக பணியாற்றுவதாக பாராட்டினார். தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்வதாக குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் சாதனை படைக்க பிறந்துள்ளதாகவும், அதற்கான திறமை நம்மிடம் உள்ளதென்றும் முதலமைச்சர் தெரிவித்தார். காவல்துறையில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டு வருவதாக கூறிய அவர், தற்போது 5 சதவிகித பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக விளக்கம் அளித்தார்.

Exit mobile version