சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

தமிழக அரசின் சார்பில் சென்னை கே.கே நகரில் நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பொதுவிருந்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் பொது விருந்து நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருந்தில் பொதுமக்களுடன் பங்கேற்று உணவு உண்டார்.

பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சருக்கு ராக்கி கட்டி ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். பொது விருந்து நடத்திய தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதேபோல், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். சமபந்தியில் துணை முதலமைச்சருடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் சமபந்தி விருந்தில் பங்கேற்ற பெண்களுக்கு துணை முதலமைச்சர் சேலைகள் வழங்கினார்.

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்றார். பொதுமக்களுடன் அமர்ந்து, அமைச்சர் வேலுமணி உணவு உண்டார்.

Exit mobile version