வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

இயேசு பிரான் பிறந்தநாளான இன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக கலையரங்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.

அதைத்தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் சொரூபத்தை பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் வைத்தார்.

தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Exit mobile version