நாளை வெளியாக இருந்த 2 படங்களுக்கு தடை! ஆண்தேவதை, ஒளடதம் படங்களுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்… 

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘ஆண் தேவதை’ படத்தை வெளியிட கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிரா இயக்கியத்தில் இயக்குனரும், நடிகருமான சமூத்திரகனி கதாநாயகனாக நடித்த ஆண் தேவதை படம் நாளை (12.10.2018) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த நிஜாம் மொய்தீன் என்பவர் சென்னை 13 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016 ம் ஆண்டு ஜீலை மாதம் படத் தயாரிப்பு பணிகளுக்காக படத்தின் தயாரிப்பாளர் முகமது பக்ரூதின் தன்னிடம் வாங்கிய கடன் பாக்கி 22 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் படம் வெளிவர தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, நாளை இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ரூதின், சிகரம் சினிமாவின் உரிமையாளர் சேக் தாவூத், ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் அதுவரை படம் வெளியாக இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

அதேபோல், நாளை வெளியாக இருந்த ஒளடதம் திரைப்படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஒளடதம்” படத்தின் அனைத்து உரிமையையும் 80 லட்சம் ரூபாய்க்கு கொடுத்து தயாரிப்பாளர் நேதாஜியிடம் இருந்து வாங்கிய நிலையில், படத்தை தன்னுடைய அனுமதி இல்லாமல் முறைகேடாக நேதாஜியே படத்தை வெளியிட முயற்சி செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஒளடதம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version