பா.ஜ.க, காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும்: சந்திரசேகர ராவ்

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி தொடர்பான முயற்சிகள் தொடங்கியுள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதன் ஒரு பகுதியாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

பின்னர் நவின் பட்நாயக்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என்றும் பிராந்திய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது அணி தொடர்பாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திரசேகர ராவ் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version