கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வர உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மத்திய குழு 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். மத்திய குழு நாளை மாலை தமிழகம் வர உள்ளதாகவும், மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ள அவர்களுடன் இணைந்து தமிழக அரசு அதிகாரிகளும் பணியாற்றுவார்கள் என்றும் கூறினார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்கள் பிரதமர் மோடியிடம் காண்பிக்கப்பட்டு, நிதி கோரப்பட்டதாக கூறிய அவர், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதே போல், அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version