சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி கும்பல் மாமூல் கேட்டு கடை மேலாளரை வெட்டும் சிசிடிவி காட்சி

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில், கடைக்குள் புகுந்த ரவுடி கும்பல், மாமூல் கேட்டு கடை மேலாளரை வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர், முட்டை கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ம் தேதி இரவு அவரது கடைக்குள் நுழைந்த 2 பேர் கல்லாப்பேட்டியை உடைக்க முயற்சி செய்தனர்.

அப்போது சத்தம் கேட்டு கடையின் மேலாளர் சுரேஷ் வெளியே வர, அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், கத்தியால் ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்த நிலையில் முட்டை கடையில் இருந்த மேலாளர் சுரேஷை வெட்டிய பின்பு, மது போதையில் அதே பகுதியில் சுற்றி திரிந்த அவர்கள், பா.ஜ.க எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில தலைவர் பாலசந்திரனுக்கு பாதுகாவலராகப் பணியாற்றும் காவலர் வீரபுத்திரனை வழி மறித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவலர் வீரபத்திரன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரதீப் மற்றும் அவரது கூட்டாளிகளான தினேஷ், சின்ன தம்பி ஆகியோர் காவலரை மிரட்டியதும், முட்டை கடைக்குள் புகுந்து மாமூல் கேட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தினேஷ், சின்ன தம்பி ஆகியோரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான, பிரதீப்பை தேடி வருகின்றனர்.

Exit mobile version