ஆசிரமத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக நித்யானந்தா மீது கனடா நாட்டுப் பெண் சிஷ்யை புகார்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தன்னை மூளைச்சலவை செய்து வைத்திருந்ததாக கனடா நாட்டுப் பெண் சிஷ்யை ஒருவர் திடுக்கிடும் குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த சாரா லேண்ட்ரி என்ற பெண், நித்தியானந்தாவின் சிஷ்யையாக பிடதி ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய பெயரை ஸ்ரீ நித்தியா ஸ்வரூப பிரியானந்தா என்று நித்யானந்தா மாற்றியதாகவும், திருவனந்தபுரம் ஆசிரமத்திற்கு பணியாற்ற தன்னை அனுப்பியதாகவும் கூறியுள்ளார். திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குழந்தைகளை குச்சியால் அடித்து கொடுமை செய்வதாக தெரிவித்த அவர், இயற்கை உபாதைகளை கழிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தார். குழந்தைகள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து ரஞ்சிதாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார். நித்யானந்தாவுக்கு சக்தி இருக்கிறது என்பதெல்லாம் பொய் என்றும் அவரிடமிருந்து மீண்டு தாம் தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நித்யானந்தா, தன் மீது மதரீதியான தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

Exit mobile version