பாலிவுட் நடிகை பர்வீன் பாபியாக மாறும் அமலா பால்!

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், சில மாதங்களுக்கு முன்பு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கபோவதாகவும், அது மறைந்த நடிகை ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியது என்றும் அறிவித்திருந்தார். தற்போது ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ், முன்னாள் பாலிவுட் நடிகை பர்வீன் பாபியைப் பற்றியது என்று தெரியவந்துள்ளது.

பர்வீன் பாபி 70-களில் இந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். அவர் அதிகமாக அமிதாப் பச்சனோடு மட்டுமே நிறையப் படங்களில் நடித்துள்ளார். டைம் வார இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் பர்வீன் பாபி.

80-களின் ஆரம்பத்தில் திரைத்துறையை விட்டு வெளிவந்தார். பின்பு, 80-களின் இறுதியில் பர்வீன் பாபிக்கு மனநல ரீதியிலான பிரச்சினை இருந்ததாகப் பல செய்திகள் உலா வந்தன. அமிதாப் பச்சனில் ஆரம்பித்து பில் க்ளிண்டன் வரை தன்னைப் பலர் கொலை செய்யத் திட்டமிட்டு வருவதாகக் குற்றம் சாட்டியவர் பர்வீன் பாபி. அவர் கடந்த 2005ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில் இயக்குநர் மகேஷ் பட், பர்வீன் பாபியுடன் இருந்த அழகான உறவை அடிப்படையாக வைத்தே இந்தத் தொடரை தொடங்க உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தத் தொடரில் பர்வீன் பாபியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகிவுள்ளது. ஏற்கெனவே ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸின் தெலுங்குப் பதிப்பில் அமலா பால் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version