சிந்தனையில் சமூகத்தை சிறிதேனும் சிந்தித்து ரௌத்திரம் பழகுவோம்

 

                                                                                 உணர்சிகள் அற்றுப்போன

உடம்பதுவே பிணமப்படி

அல்லாத மற்றதெல்லாம்

       பொல்லாத உயிர்விலங்காம்

                                – நெய்தலான் 

 

               உணர்சிகள் அற்ற உடல் பிணமென்றும் , அவ்வாறல்லாத அனைத்தும் உயிருள்ள விலங்கு என்றும் சொல்கிற இந்த கவிஞரின் வரிகளுக்கு பின் பாரதியின் சாயல்  காண முடிகிறது…உணர்ச்சிகளில் உயர் உணர்ச்சி எது என்றால் கோபம் என்கின்றனர் பெரியோர். ஆம்.. உண்மைதான். மனதில் சேர்ந்த அடித்துணை அழுக்கையும் ஒரே முறையில் வெளிக்கொணர்ந்து மனதை சுத்தப் படுத்திவிடுகிற ஒரு மகத்தான மனித மாண்பு. கோபப்பட்டு தீர்ந்த பின் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு தெய்வ நிலை அட்பாயவும் ஒருவனை தயார் படுத்தி விடுகிற கோபமே சிறந்தது என்பது ஏற்கத் தக்கதே.

 அனால் இந்த கோபம் என்கிற உணர்வை பாரதி வேறு விதமாக அணுகுகிறான்.கோபம்,ஆத்திரம்,சினம் என பற்பல வார்த்தைகள் இருக்கும்போது புதிதாக ரௌத்திரம் என்கிற  வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறான். ஆக என் புதிதாக சொல் தேடுகிறான் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

 

“சினம் எனும் சேர்ந்தாரை கொல்லி”

“கோபத்தோடு எழுபவன் இழப்போடு அமர்கிறான் “

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு“

என்றும் சொல்லி கோபத்திற்கு அரிதாரம் பூசப்பட்டிருப்பதை உடைத்து புதுமை படைக்க எண்ணியே புதியதோர் சொல் பயன்படுத்தியிருக்கிறான் பாரதி.

 

எல்லோரும் கோபத்தை குறித்து இப்பபடி சொல்லுகையில் இவன் ஒருவன் மட்டும் இதற்காக மெனக்கெட்டு புது சொல் தேடி நம்மை ரௌத்திரம் பழகென்று சொல்லுவதேன்? பாரதி தவறான் அறிவுரை வழங்கி விட்டானோ? என்று சிந்திப்போமானால் இல்லை என்பதே பதில்.

     புதிய சொல் எல்லாம் பயன் படுத்தினாலும் அர்த்தம் ஒன்றுதானே என்ற அளவில் புரிந்து கொண்டு “ஆறுவது சினம் “ என்கிறாளே ஔவை. அப்படியானால் பாரதி அவ்வையின் கருத்துக்கு மாற்றுக்கருத்து உடையவனோ என்று எல்லாம்  என்ன வேண்டாம். நிச்சயம் இல்லை.ஔவை உள்ளதற்காக  சொன்னாள். பாரதி உலகத்துக்காக சொன்னான்.இரண்டையும் வேறு விதமாக பார்த்தல்  நலம்.

ஒன்றின் மீது நமக்கு ஏற்படுகிற கோபமானது நம்மை சூழ்ந்தவரை, சுற்றத்தாரை, சமூகத்தை எதையும் கவனிக்காமல்  தான்தோன்றித் தனமாக தன்னை மட்டும் முன் நிறுத்தி சுயநலம் பேணுவதாக  இருக்குமானால் அதுவே  சினம்.எப்போது நம் கோபம்  சமூக சிந்தனையும், நாட்டை திருத்துகிற பொதுநல உணர்வும், சரியான சூரத்தனத்தை வெளிக்காட்ட ஏற்றதொரு நல்ல காரணத்தையும் கொண்டிருக்கிறதோ அப்போது அது ரௌத்திரம் என்பதே பாரதியின் பார்வை. 

 எனவேதான் தனியே ஒரு சொல்லெடுத்து இந்த கருத்து மாலையை தொடுக்கிறான். இப்போது இந்த வேறுபாட்டை மனதில் கொண்டு நம் ஔவை  சொன்னதை பார்த்தால் , மனிதனாக பிறந்து விட்ட படியால் சினம் எழுவது இயற்கை ஆகவே அவற்றை அடக்கி கொள்ள வேண்டும் என்றபடிக்கு “ஆறுவது சினம்“ என்று சொல்லி நம்மை அமைதிப்படுத்துகிறாள்..

அனால் முன்டாசுக்கவியின் பார்வையே வேறு. உள்ளதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போகவேதான் புதிய சொல்லே தேடி தந்திருக்கிறான். ஆக, அவன் பார்வையும்கூட  இல்லாது போன ஒன்றை எண்ணி வருந்தி அதனை புதிதாய் கொண்டு வருவதாகத்தான் இருந்திருக்க கூடும்.மனிதனாக பிறந்தும் சமூக அவலங்களை தட்டி கேட்கிற உடல் திறனும் மன வன்மையும் பெற்றிருந்தும் ஏதும் செய்யாமல் கண்டும் காணாமல் இருக்கிற இளைஞர் கூட்டத்திற்காக சொல்லுகிறான்.பொறுமைக்கு தவறான விளக்கம்  படித்து வீணாகி விட்ட இளைஞர்களே..பொதுநலம் பொருந்திய நல்ல கோபம் கொள்ள (ரௌத்திரம்) பழகி கொள்ளுங்கள் என்று சொல்லுகிறான்.

 எந்தை இந்தியா ஏற்றமிகு புகழ் பெற இந்த கணம் முதல் ரௌத்திரம் கொள்ளுவோம். கோபத்தை கொளுத்துங்கள். ஆத்திரத்தை அழியுங்கள். சினத்தை விளக்குங்கள். சிந்தனையில் சமூகத்தை சிறிதேனும் சிந்தித்து ரௌத்திரம் பழகுவோம் …

 ஆறட்டும் சினம் – ஆனாலும் ரௌத்திரம் பழகுவோம்

Exit mobile version