வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் காற்றுஅழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் மையம் கொள்ள உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு தற்போது அறிவித்துள்ளது. பூமத்யரேகையினை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற ஜனவரி 27ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இது வடமேற்கு திசையில் நகர்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு தினங்களில் லேசான மற்றும் மிதமான மழைப்பொழிவு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 27 மற்றும் 28 ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் லேசான தூறல்கள் மட்டும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையினைப் பொறுத்தவரையில், தென்கிழக்கு கடற்கரையை ஒட்டிய மாவட்ட மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஏனெனில் சூறாவளிக் காற்றானது மணிக்கு 40 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version